தலைவி கூற்று
(தலைவனது பிரிவையாற்றாத தலைவி தோழியை நோக்கி, “தலைவர் என்னோடு அளவளாவாம லிருப்பினும் அவரைக் காணுமாத்திரத்தில் எனக்கு இன்பம் பிறக்கும்; அஃதும் இப்பொழுது இலதாயிற்று” என்று கூறியது.)
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட விருக்கை முடவன்
உட்கைச் சிறுகுடைஐ கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே.
என்பது பிரிவிடை யாற்றாமையிற் றலைமகள் தோழிக்குரைத்தது.
பரணர்.
……………
………
….
On the tall hill
where short stemmed night shade quivers,
a squatting cripple
sights a honey hive,
above,
points to the honey,
cups his hand ,
and licks his fingers:
so too ,
even if one’s lover
doesn’t love or care
it still feels good
inside
just to see him
now and then.
Poet : Paranar
Translated by A.K. Ramanujan
குறு தாள் கூதளி – குறிய அடியையுடைய
கூதளஞ்செடி, ஆடிய நெடு வரை – அசைந்த உயர்ந்த மலையிலுள்ள
பெரு தேன் கண்ட – பெரிய தேனடையைக் கண்ட
இருக்கை முடவன் – காலின்மையின் எழுந்து நிற்றற்கு இயலாமல் இருத்தலையுடைய முடவன்
உள் கை சிறுகுடை – உள்ளங்கையாகிய சிறிய குவிந்த பாத்திரத்தை
கோலி – குழித்து, கீழ் இருந்து – அம்மலையின் கீழே இருந்தபடியே
சுட்டுபு – அத்தேனிறாலைப் பலமுறை சுட்டி
நக்கியாங்கு – உள்ளங்கையை நக்கி இன்புற்றதைப் போல
காதலர் – தலைவர்
நல்கார் நயவார் ஆயினும் – தண்ணளி செய்யாராயினும் விரும்பாராயினும்
பல்கால் காண்டலும் – பலமுறை பார்த்தலும்
உள்ளத்துக்கு இனிது – எனது நெஞ்சிற்கு இனிமை தருவது.
(முடிபு) காதலர் நல்கார் நயவாராயினும் பல்காற் காண்டலும் இனிது.
(கருத்து) தலைவரைக் காணாதிருத்தல் துன்பத்தைத் தருவதாயிற்று.
Tamil Commentary – U.V.Swaminathan Iyer
Please leave your comments.
Here is the link for my orkut community for this blog http://www.orkut.com/Community.aspx?cmm=49797549&refresh=1